This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

மடை திறந்து பாடும் நதியலை

அன்று சங்கீதாவின் பிறந்தநாள்.

முன்தினம் குறைவாகத் தூங்கிய சுவடே இல்லாமல் உற்சாகமாய் இருந்தான் கதிர். மோதிரத்தின் சாட்டின் பேக்கிங்கின் மேல் திருப்தியில்லாமல் ஒரு கேட்பரிஸ் எக்லேர்ஸ் சாக்லேட்டிற்க்கு சூட்டி மீண்டும் அழகாக பேக் செய்தான். அத்தோடு ஒரு மினி கார்ட் வைத்து "For the one with sweetest heart" என்று எழுதி கையெழுத்திட்டான். திருப்தியடைந்தவன் கல்லூரிக்கு சென்றான்.

அன்று முழுவதும் ஏனோ சங்கீதாவைக் காணவில்லை.

மாலையில் ஏமாற்றத்தோடு வீடு திரும்ப நினைத்தவன் கல்லூரி வாசலருகே புன்னை மரத்தடியில் நின்றிருந்த சங்கீதாவைப் பார்த்தவுடன் குஷியானான்.

ஓட்டமும் நடையுமாக அவளிடம் சென்ற அவன் மூச்சு வாங்க "சங்கீதா! உன்னைய... எங்கல்லாம... தேடறது..., ஹாப்பி பர்த்டே. இந்தா... உனக்கு ஒரு... சின்ன சர்ப்ரைஸ்" என்றான்

"தாங்ஸ். இந்தாங்க ஸ்வீட். என்ன அது?" என்றபடி அவனிடமிருந்து வாங்கிப் பிரித்தாள்.

சாக்லேட்டை சுற்றியணைத்தபடி இருந்த மோதிரத்தைப் பார்த்த சங்கீதாவின் கண்கள் பிரகாசித்தன.

"ரொம்ப நாளா எப்படிச் சொல்றதுன்னு தவிச்சிக்கிட்டு இருந்தேன்" என்ற கதிரை என்ன என்பது போல பார்த்தாள்.

"நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன் சங்கீ. நீ என்னை லவ் பண்றயா?" என்றான் கதிர்.

மோதிரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மெலிதாகப் புன்னகைத்தவள் பஸ் வருவதைப் பார்த்தவுடன் பதிலேதும் சொல்லாமல் ஓடினாள்.

பின்னாலேயே "இப்படி பதில் சொல்லாம ஓடினா எப்படி. ஸே எஸ் ஆர் நோ!" என்று கத்தியபடி ஓடினான் கதிர். பஸ்ஸில் ஏறிய சங்கீதா அவனைத் திரும்பிப் பார்த்து தலையையும் கையையும் அசைத்தாள். கைகளில் சற்று முன் கதிர் அளித்த மோதிரம் இருந்தது.

மறுநாள் மாலை, நடந்ததை விஸ்வாவுக்கும் ரத்னகுமாருக்கும் உற்சாகமாக விவரித்துக் கொண்டிருந்தான் கதிர். தூரத்தில் கானா, வாசு, ராஜேந்தர் வருவதைப் பார்த்தவுடன் அனைவரும் அமைதியானார்கள்.

கானா நேராய் வந்து கதிருடன் கைகுலுக்கினான். "சங்கீதா உன்னைய லவ் பண்றாலாமே! கங்கிராட்ஸ்டா"

"சேச்சே! யாருடா சொன்னது உனக்கு." - கதிர்

"நேத்திக்கு நீ அவளுக்கு மோதிரம் குடுத்தது, அவ உன் காதலுக்கு ஓ.கே சொன்னது, இப்ப அத நீ என்கிட்ட சொன்னா நான் வருத்தப்படுவேன்னு மறைக்கிறது, எல்லாந் தெரியுன்டா எனக்கு" - கானா

கதிருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

"நீ நெனைக்கிற மாதிரி எனக்கொன்னும் வருத்தமில்ல. அவ என்னை அவமானப்படுத்தினப்பவே அவளை மறந்துட்டேன்."
- கானா

எல்லோரும் கானாவைக் அமைதியாகப் பார்த்தார்கள்

"இப்பகூட அவ உனக்கு காதலியா இருக்கலாம் எனக்கு எப்பவுமே அவ எதிரி தான். ஒரு நாள் நான் பெரிய ஆளா வருவேன் அப்ப அவளுக்கு தெரியும் இந்த கானா யாருன்னு" - கானா

"மச்சி! உங்க பஞ்சாயத்த அப்றம் வச்சிக்கங்க. எனக்கு இப்ப அவசர உதவி ஒன்னு தேவைப்படுது" -வாசு

"என்னடா. உனக்கும் லவ்வா?" என்றான் விஸ்வா கிண்டலாக

"ஆமா. ஆனா நான் ஒரு வருஷம் முன்னாலயே ஆரம்பிச்சிட்டேன். இப்ப அவ வீட்ல அவளுக்கு அவசரமா கல்யாணம் பண்ணப் பாக்றாங்க" - வாசு

"பொண்ணு யாருடா வாசு?" - ரத்னகுமார்

"நம்ம காலேஜ் இல்லடா. பொள்ளாச்சியில எங்க பெரியம்மா வீட்டுக்கு பக்கத்து வீடு. அவங்க தம்பி பாபு, நம்ம காலேஜ்ல தான் பஸ்ட் இயர் படிக்றான் இவ சேலத்துல பைனல் இயர் பி.எஸ்சி படிக்றா." - வாசு

"எப்படிடா பழக்கம்?" - ரத்னகுமார்

"அவன் தம்பிய நம்ம காலேஜ்ல சேத்தறதுக்கு முன்னால எங்க பெரியம்மாகிட்ட கேட்டிருக்காங்க, அப்ப செமஸ்டர் லீவுல நான் அங்க போயிருந்தேன். அவ தம்பி நம்ம காலேஜ்ல சேந்தப்றம் அங்க அடிக்கடி போக ஆரம்பிச்சேன். ஒருத்தருகொருத்தர் புடிச்சி போய் லவ் பண்ண ஆரம்பிச்சம்" - வாசு

"இப்ப என்ன திடீர்னு கல்யாணம். உங்க விஷயம் அவங்க வீட்ல தெரிஞ்சி போச்சா?" - ரத்னகுமார்

"ஆமா, அவங்க வீட்ல என்னைப் புடிக்கலை. அதனால வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க" - வாசு

"ஏன் புடிக்கல?" - ரத்னகுமார்

"எங்க அப்பா எங்கம்மாவ விட்டுட்டு என் சின்ன வயசுலயே ஓடிப்போயிட்டாரு. இதப்பத்தி விசாரிச்சி தெரிஞ்சிகிட்ட அவங்களுக்கு என்னைய மாப்ளயா ஏத்துக்க மனசு வரல"

"உங்கம்மா ஒத்துகிட்டாங்களா?" - ரத்னகுமார்

"எங்கம்மா ஒத்துக்கிட்டாங்க. அதுமட்டுமில்லாம எங்க சொந்த ஊர்ல எங்களுக்கு நாலஞ்சி வீடு இருக்கு அதுல வர்ற வாடகைய வச்சி எனக்கோ அவளுக்கோ வேலை கிடைக்கிற வரைக்கும் வாழ்க்கைய சிரமமில்லாம ஓட்டிடலாம்" - வாசு

"சரி. நாங்க என்ன பண்ணனுங்கிர?" - ரத்னகுமார்

"அவளை நான் மருதமலைல வச்சி தாலி கட்டி சொந்த ஊருக்கு கூட்டிப் போயிடலாம்னு இருக்கேன். அங்க யாரு வந்தாலும் நானும் என் லோக்கல் ப்ரண்ட்சும் சமாளிப்போம்" - வாசு

"சரி கவலையவிடு. சத்தமில்லாம இன்னும் ரெண்டே நாள்ல காரியத்த முடிச்சிடலாம். வேளச்சேரி விஜயன்னு என் பிரண்டு ஒருத்தர் இருக்கார் பெரிய தாதா. அவரை வேனும்னா துணைக்கு கூப்பிட்டுக்கலாம்" - விஸ்வா

"யாருமே வேணான்டா. நீங்க மட்டும் போதும், திட்டமெல்லாம் ரெடி. சுமோ வேனுக்கு கூட சொல்லிட்டேன். கல்யானம் முடியற வரைக்கும் நீங்க வந்தா போதும்" - வாசு

"ஓ.கே. டன். அப்ப நாளைக்கு பாப்பம்"

மறுநாள் சுமோவில் அனைவரும் பொள்ளாச்சிக்கு விரைந்தனர்.


நீங்க சொல்லுங்க